நீதி போதனைக்கு என தனிப்பாடம் அமைக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) வரவேற்கின்றது. கடந்த மாதங்களில்
தமிழகத்தில் நடைபெற்ற சம்பவங்கள் , வகுப்பாசிரியை மாணவனே கத்தியால்
குத்திக் கொன்றது, பொறியியல் கல்லூரி மாணவர்கள் தனது தோழியை கூட்டாக
பலாத்காரம் செய்தது, பஸ்தினம் கொண்டாட மறுப்பு தெரிவித்ததால் பொதுமக்கள்
மீது கல்வீசி எறிந்தது போன்ற சமூகத்திற்கெதிரான
மாணவர்களின் செயல்பாடுகள் நம்மை அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும்
ஆழ்த்தியது. மேற்கத்திய நாடுகளில் நடைபெறும் இது போன்ற சம்பவங்கள் நம்
தமிழகத்தில் அரங்கேறி இருப்பதுதான் அதற்கு காரணம்.
மாணவர்களின் இத்தகைய
தவறான செயல்பாடுகளுக்கு காரணங்கள் பல இருந்தாலும் கல்வித்துறையும்,
பள்ளிவளாகமும் மாணவர்களுக்கு தேவையானவற்றை கொடுக்க மறந்ததுதான் இதற்கான
முக்கியக் காரணம். மதிப்பெண்கள் அதிகம் பெற வைப்பதற்கான முயற்சியில் தான்
ஒவ்வொரு ஆசிரியர்களும் செயல்படுகிறார்கள். அதன் விளைவு மாணவர்கள் ஒருவிதமான
அழுத்தத்திற்கு ஆளாகின்றார்கள். ஒவ்வொரு கல்வி வளாகமும் மாணவர்களை
இயந்திரங்களாகத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். மாணவர்களுக்கு
சமூக அக்கறை ஏற்படுத்துவது குறித்த, அவர்களின் பண்புகளை மேம்படுத்தும்
விதமான எந்தவொரு பாடத்திட்டமும் அவர்களுக்கு இருப்பதில்லை. இந்த நிலை
தொடருமானால் ஒழுக்கமில்லாத ஒரு புதிய தலைமுறை உருவாகிவிடும் என்பதில்
சந்தேகமில்லை.
ஆகவே, பள்ளிகளில் நீதி போதனைகளுக்கு என தனிப்பாடம்
அமைக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்
என்று இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) தமிழக அரசை கேட்டுக்
கொள்கின்றது. மேலும், ஆபாசம், வன்முறை போன்ற கருத்துக்களை உள்ளடக்கிய
திரைப்படங்களை திரையிடுவதற்கு அனுமதிக்க கூடாது எனவும் , பெற்றோர்களுக்கு
குழந்தை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் SIO
தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றது.
ஷப்பீர் அலி
மாநில மக்கள் தொடர்பு செயலாளர்
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு
தமிழ்நாடு