Loading....

Blog Page

தேசிய கல்விக் கொள்கை எனும் பிற்போக்கு கொள்கையை புறக்கணிப்போம்.!

திருப்பரங்குன்ற விவகாரத்தில் மதவாதத்தை கையில் எடுத்த பாஜக, மொழி அரசியல் மூலம் மற்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டை தனிமைப்படுத்திடும் பிரிவினைவாத அரசியலை தற்போது முன்னெடுத்து வருகிறது.

மும்மொழி கொள்கை விவகாரத்தில் மற்ற மாநிலங்களின் மொழியை, கலாச்சாரத்தை 90 விழுக்காடு ஆக்கிரமித்து விழுங்கியிருக்கும் ஹிந்தி மொழி, தமிழ்நாட்டு வளர்ச்சி சூழலுக்கு மூன்றாம் மொழியாக வருவது பொருத்தமற்றது என்பது தமிழ்நாட்டை ஆளும் அரசுகளின் கொள்கை மட்டுமல்ல, தமிழ் மக்களின் நிலைப்பாடும் அதுவே. இது போன்ற சிந்தனைகளே இன்று வரை மற்ற மாநிலங்களை ஆக்கிரமித்துக்கொண்ட ஹிந்தி-இந்துத்துவ சிந்தனையை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை.

கூடுதலாக ஒருமொழியை கற்பதை அறிவாக மட்டுமே பாருங்கள் எனச்சொல்வதை அபத்தமான புரிதலாகவே நாம் பார்க்கிறோம். மூன்றாம் மொழியாக ஒரு மொழியை கற்றுக் கொள்வதற்கு எதிரானதல்ல தமிழ்நாடு. ஏற்கனவே மூன்றாம் மொழியாக ஹிந்தி, பிரஞ்சு என பல்வேறு மொழிப்பாடங்கள் இங்கு கற்பிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

மொழி எனும் துருப்பு சீட்டின் மூலம் புதிய தேசிய கல்விக் கொள்கையை எப்படியாவது தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவ செய்துவிட வேண்டும் என்பதில் ஒன்றிய அரசு முனைப்புடன் இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையில் சில நிலைப்பாடுகள் உயர்கல்வி தளங்களில் செயல்பாட்டுக்கு வந்துவிட்டபோதிலும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் எந்த உள்ளீடும் செய்ய முடியாமல் இருப்பதை பாஜகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

கல்வி மற்றும் மொழிக்கான நிதிப் பகிர்வில் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான போக்கைதான் பாஜகவின் செயல்பாடுகள் நமக்கு காட்டுகின்றன. இந்த தருணத்தில், நாம் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு மனநிலை, ஹிந்தி மொழிக்கு எதிரானது அல்ல. மாறாக, இந்திய கூட்டாட்சிக்கு எதிரான பாஜகவின் பாசிச போக்கிற்கு எதிரானது என்பதை SIO அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறது.

இந்த தேசிய கல்விக் கொள்கை என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்திய கல்விச்சூழல் மற்றும் அறிவு பெருக்கத்திற்கே எதிரானது என்பதையும், அதில் நிறைந்து காணப்படும் இந்துத்துவவாதிகளின் பிற்போக்குத்தனமான கருத்துகள் மீதான விமர்சனத்தையும் மக்கள் மத்தியில் SIO எடுத்துச்செல்லும்.

சா முஹம்மது சர்ஜூன்,
மாநில மக்கள் தொடர்பு செயலாளர்,
SIO தமிழ்நாடு.
+91 90427 88014

SIO Tamil Nadu Strongly Condemns the Union Government’s Unjust Diversion of Tamil Nadu’s Educational Funds

The Students Islamic Organisation (SIO) of Tamil Nadu strongly condemns the unjust and politically motivated decision by the Union BJP Government to divert ₹2,152 crore allocated for Tamil Nadu’s students under the PM SHRI scheme to other states. This move is nothing short of an attack on the educational rights of Tamil Nadu’s students and reflects a dangerous trend of coercion and political discrimination against the state.

Tamil Nadu has always upheld its progressive, inclusive, and equitable approach to education. The state’s rightful rejection of the National Education Policy (NEP) 2020 and the three-language policy should not be used as an excuse for financial retribution. The decision to withdraw and redistribute these critical educational funds is an open act of blackmail aimed at forcing Tamil Nadu to accept policies against its will.

SIO Tamil Nadu asserts that education is a fundamental right, not a tool for political manipulation. Punishing students for the state’s independent stance on education policy is unethical and unconstitutional. The BJP government’s ruthless governance has yet again proven its disregard for federalism, social justice, and students’ welfare.

We demand:

  1. Immediate reinstatement of the ₹2,152 crore originally allocated to Tamil Nadu’s students.
  2. An end to the political and financial coercion that undermines Tamil Nadu’s right to determine its own educational policies.
  3. Respect for federal principles, ensuring that states are not punished for making independent policy decisions.

SIO Tamil Nadu stands in solidarity with Tamil Nadu’s students, educators, and policymakers who fight for an education system that serves the people, not political interests. We call upon all student organizations, activists, and citizens to resist this unjust decision and demand accountability from the Union Government.

தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை பிற மாநிலங்களுக்கு மாற்றிய ஒன்றிய அரசை எஸ்ஐஓ தமிழ்நாடு வன்மையாகக் கண்டிக்கின்றது

PM SHRI திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ₹2,152 கோடியை பிற மாநிலங்களுக்கு மாற்றிய மத்திய பாஜக அரசின் தவறான மற்றும் அரசியல் நோக்கங்களை உடைய முடிவை எஸ்ஐஓ தமிழ்நாடு வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்த நடவடிக்கை தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமைகள் மீதான தாக்குதலையும் தமிழ்நாடு மீதான ஒன்றிய அரசின் அரசியல் பாகுபாட்டையும் வெளிப்படுத்தும் செயலாக உள்ளது.

தமிழ்நாடு அரசின் அனைவருக்கும் சமமான கல்வி என்ற கொள்கையின் அடிப்படையில், ஒன்றிய அரசின் தேசிய கல்வி கொள்கை (NEP) 2020 மற்றும் மும்மொழி கொள்கைக்கு எதிராக எடுக்கப்பட்ட நிலைபாடுகளுக்கு பழிவாங்கும் விதமாக இந்த நிதி மாற்றம் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு அரசை தனது முடிவுகளை திரும்பப் பெற வைப்பதும் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை திணிப்பதுமே கல்வி நிதியை மாற்றிவிடுவதன் முக்கிய நோக்கமாகா உள்ளது.

எஸ்ஐஓவின் கோரிக்கைகள்:

  1. தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ₹2,152 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்.
  2. தமிழ்நாட்டின் கல்வி கொள்கைகளை சுயமாக தீர்மானிக்கும் உரிமையை ஒடுக்கும் அரசியல் மற்றும் நிதி ரீதியிலான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்.
  3. கூட்டாட்சி கொள்கைகளை மதிப்பீடு செய்து, ஒன்றிய அரசின் தலையீடு இன்றி மாநிலங்கள் சுயமாக கொள்கை முடிவுகளை எடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

சர்வ விஷ்ச அபியான் (SSA) திட்ட நிதியின் முதல் தவணை தொகையை உடனே வழங்க வேண்டும் – எஸ்ஐஓ வலியுறுத்தல்

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய பாஜக அரசு
நிறுத்தி வைத்திருக்கிறது. புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு எதிர்க்கிறது என்ற காரணத்திற்காகவே இப்படி மலிவான பழிவாங்கல் நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொள்கிறது. இது தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத்தையும், மாணவர்களின் நலனையும் பாதிக்கும் போக்காகும்.

ஒன்றிய அரசு தனது அரசியல் பழிவாங்கலை நிறுத்திவிட்டு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய சர்வ விஷ்ச அபியான் (SSA) திட்ட நிதியின் முதல் தவணை தொகை ₹573 கோடியை உடனே வழங்க வேண்டும்.

தமிழ்நாடு கல்வியில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதை நாடறியும். எனவே தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத்திற்கு இவ்வாறு தடங்கல் செய்யும் எந்த ஒரு நடவடிக்கையையும் பாஜக கைவிட வேண்டும்.

ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு 100 ரூபாய் வழங்கினால் 29 ரூபாய் மட்டுமே மாநிலத்திற்குத் திரும்பிக் கொடுக்கப்படுகிறது. 2018 – 2023 வரை 8.04 லட்சம் கோடி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் வழங்கி உள்ளோம். ஆனால் திரும்பி வழங்கியது 1.58 லட்சம் கோடி. இவ்வாறு ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.

உண்மை நிலவரம் இவ்வாறிருக்கும் நிலையில், இப்போது SSA திட்ட நிதியையும் நிறுத்துவது ஏற்புடையதல்ல. எனவே அதை உடனடியாக வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பாக வலியுறுத்துகிறோம்.

– முஹம்மது ஜாஃபர்,
மாநில இணைச் செயலாளர்,
எஸ்ஐஓ தமிழ்நாடு.

தேர்வில் முறைகேடுகள், குளறுபடிகள்: ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் எஸ்ஐஓ வலியுறுத்தல்

இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் அம்பலமாகியுள்ளது. அதேபோல, யுஜிசி நெட் தேர்விலும் முறைகேடுகள் அம்பலமாகி அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நடைபெற இருந்த முதுகலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இப்படியான தேர்தல் குளறுபடியால் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்குக் காத்திருந்த மாணவர்கள் கடுமையாக மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

முதுகலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக பல மருத்துவர்கள் தம் சம்பாத்தியத்தை குறைத்துக்கொண்டு தேர்வுக்காக முழுமையாகத் தயாராகி வருகின்றனர். அவர்கள் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால்தான் முதுகலைப் படிப்பில் சேர முடியும் என்ற நிலையில், ஏற்கனவே மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட தேர்வு இம்முறையும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது தேர்வுக்குத் தயாரான ஏராளமானோரை கடுமையாக பாதித்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதால் அவர்கள் சில நாட்களுக்கு முன்பாகவே அங்கு சென்று தங்கி தேர்வுக்குத் தயாராகினர். இந்தச் சூழலில், கடைசி நேரத்தில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருப்பது அனைத்து மாணவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தேர்வில் தேர்வுக்கான கட்டணம் வசூலிப்பது தொடங்கி, தேர்வு மையங்களை வெளி மாநிலங்களில் அமைத்ததுவரை ஆரம்பம் முதலே பல்வேறு குளறுபடிகள் இருந்த நிலையில்தான், தற்போது முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேர்வுகளை நேர்மையாகவும் முறையாகவும் நடத்தத் தகுதியற்ற ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும். இன்று ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு உடனடியாக நடத்தப்பட வேண்டும்; அத்துடன் மாணவர்களுக்கு அவர்களின் மாநிலங்களிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட வேண்டும். மேலும், நீட் தேர்வுகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என எஸ்ஐஓ வலியுறுத்துகிறது.

அஹ்மது ரிஸ்வான்,

மாநிலத் தலைவர்,

SIO தமிழ்நாடு.

Pride Month, A Warning!

LGBTQIA+ ‘சமூகம்’ என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோரால் ஜூன் மாதம் Pride மாதமாகக் கொண்டாடப்படுகிறது. அவர்களின் நெறிபிறழ்ந்த செயல்களை இயல்பாக்கம் செய்யவும், அவற்றின் மீதுள்ள இயல்பான அருவருப்பைப் போக்கி, சமூக ஏற்பைப் பெறவும் இவ்வாறு கடைப்பிடிக்கப்படுகிறது. பல விதமான பாலின ஈர்ப்பையும், பாலின அடையாளத்தையும் கொண்டவர்களாக LGBT+ ‘சமூகத்தினர்’ தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். அவர்களின் கருத்தியலைப் பரவலாக்குவதற்கு ஜூன் மாதத்தில் Pride பேரணிகள், நேரடி மற்றும் இணையவழி நிகழ்வுகள் போன்றவை நடத்தப்படுகின்றன.

ஒடுக்கப்பட்டோர் என்று சொல்லிக் கொண்டு தமிழக நகரங்களிலும் Pride பேரணிகள் அரசின் துணையோடு நடத்தப்படுகின்றன. LGBT+ கருத்தியலை விமர்சிக்கும் கருத்துகள், தனிமனிதர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது. அதேவேளை, இந்தக் கருத்தியலை பள்ளிக்கூட பாடத்திட்டத்தில்கூட நுழைத்து குழந்தைகளைப் பாலியல்மயமாக்க முயற்சி செய்யப்படுகிறது. இச்சூழலில், பெற்றோர் தம் குழந்தைகளை இதிலிருந்து பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அனைவரையும் உள்ளடக்குதல் (inclusivity), பன்முகத்தன்மை (diversity) போன்ற முழக்கங்களைக் கொண்டு பெண்களின், பழங்குடியினரின், தலித்களின், சிறுபான்மையினரின் வாய்ப்புகளை LGBTயினர் தட்டிப் பறிக்க முனைகின்றனர். முக்கியமான சமூக பொருளாதார அரசியல் பிரச்னைகளிலிருந்தும் மக்களை தம் பக்கம் திசை திரும்புகின்றனர். அரசியல் சரித்தன்மை (political correctness) எனக் கூறி, எவ்வித ஆதாரமோ விவாதமோ இன்றி தங்களின் மனோ இச்சைகளை பொது மக்கள் அப்படியே ஏற்க நிர்பந்திக்கின்றனர். ஹார்மோன் சிகிச்சை, பாலின மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட ஆபத்தான மற்றும் இயல்புக்கு மாற்றமுடியாத அளவு உடலைச் சிதைக்கும் மருத்துவ சிகிச்சை முறைகளை வலியுறுத்துகின்றனர். மேலும், LGBTயினர் எய்ட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் பரவுவதைக் குறித்த அறிவியல் ஆய்வுகளையும் புறக்கணிக்கின்றனர்.

LGBT+ கருத்தியலுக்கு எதிராகக் கருத்துரைப்போர் மீது பல முத்திரைகள் குத்தப்படுகின்றன. அதுகுறித்து விவாதிப்பதற்கான வெளி கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி வருகிறது. LGBT+ நபர்களுடன் மக்கள் கண்ணியமாக உரையாடும்படி நாங்கள் வலியுறுத்துகிறோம். கருத்து வேறுபாடுகள் இருப்பினும் சமூக ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டியது நமது கடமை. நன்மையை ஏவி தீமையைத் தடுத்தலை வலியுறுத்துகிறது இஸ்லாமிய அறவியல். அந்த வகையில், LGBT+ ‘சமூகத்தைச்’ சேர்ந்த, அவர்களை ஆதரிக்கிற முஸ்லிம் சகோதர சகோதரிகள் தங்களின் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துவதிலும், நபிகளாரின் வழிமுறைகளைப் பின்பற்றுவதிலும் கவனம் செலுத்தி, நமது பித்ரா எனும் இயல்புக்கும் மார்க்கத்துக்கும் மாற்றமான செயல்களில் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்துகொள்வதோடு, பிறரையும் இப்படியான தீங்குகளிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO)

முஸ்லிம் தேர்வர்கள் பாதிப்பு: SET தேர்வு அட்டவணையில் மாற்றம் தேவை – SIO கோரிக்கை

தமிழகக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிகளுக்கான SET தகுதித் தேர்வு சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு தேதி முஸ்லிம் தேர்வர்களை பாதிக்கும் வகையில் உள்ளது.

ஆங்கிலம், வணிகம் போன்ற 6 பாடங்களுக்கு 07.06.2024 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்குத் தேர்வு நடைபெறும் என தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மதியமும் முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். இதைக் கருத்தில் கொள்ளாமல் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படியான அலட்சியப் போக்கால் முஸ்லிம் தேர்வர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள்.

எனவே, முஸ்லிம் தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெள்ளிக்கிழமை மதியம் நடைபெறும் SET தேர்வுகளின் நேரத்தை மாற்றுமாறு தமிழக அரசு மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு SIO கோரிக்கை வைக்கின்றது.

ரஹமத்துல்லா,
மாநில கல்வி வளாகச் செயலாளர்,
SIO தமிழ்நாடு.

ரம்ஜான் அன்று தேர்வு – தமிழக அரசுக்கு எஸ்ஐஓ கண்டனம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்திற்கான ஆன்லைன் தேர்வு ரமலான் பெருநாளான இன்று மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

இந்த அறிவிப்பு நேற்று இரவு 9 மணிக்குத்தான் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் தம் பண்டிகையைக் கொண்டாடக்கூடிய நாளில், அரசு விடுமுறை தினத்தில் இதுபோன்ற தேர்வுகளை வைப்பது ஏற்புடையதல்ல. முஸ்லிம் மாணவர்கள் தேர்வை எழுதக் கூடாது என்ற நோக்கத்துடன் இவ்வாறு செய்யப்படுகிறதா என்ற கேள்வியை இது எழுப்புகிறது. முஸ்லிம் சமூகத்தை அலட்சியப்படுத்தும் போக்கு இது.

இந்தத் தேர்வு அறிவிப்பு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். உயர்கல்வித் துறை இதில் தலையிட்டு இன்று நடக்க உள்ள தேர்வை வேறு தேதிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். மேலும், ரம்ஜான் பண்டிகை அரசு விடுமுறை தினம் என தெரிந்தும் இன்று ஆன்லைன் தேர்வு நடக்கும் என அறிவிப்பு வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்ஐஓ கேட்டுக்கொள்கிறது.

முஹம்மது ஜாஃபார்,

மாநில இணைச் செயலாளர்,

எஸ்ஐஓ தமிழ்நாடு.

சிஏஏ சட்டத்தைத் திரும்பப் பெறுக! – எஸ்ஐஓ வலியுறுத்தல்

முஸ்லிம்களின் புனித மாதமான ரமளான் தொடங்கியுள்ள நிலையில் சிஏஏ சட்டத்தை நிறைவேற்றப் போவதாக ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் அறிவிக்கையை வெளியிட்டிருப்பது பாஜகவின் குயுக்தியையும், தோல்வி பயத்தையுமே காட்டுகிறது.

மதப் பாகுபாடுகளைக் கற்பிக்கும் சிஏஏ சட்டம் இயற்றப்பட்டபோது அதற்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லிம்களும், நீதியில் அக்கறையுள்ள அனைவரும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 2020ஆம் ஆண்டு கொரோனா காரணமாக நாட்டு மக்களின் நலன் கருதி இந்தியா முழுவதும் நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தியே அரசியல் செய்யும் பாஜக, சிஏஏ சட்டத்தின் மூலம் இந்நாட்டின் முஸ்லிம் மக்களை ஒடுக்கவும், பெரும்பான்மைவாதத்தைத் தூண்டி அரசியல் லாபமடைவதற்காகவுமே தேர்தல் நேரத்தில் சிஏஏவை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருக்கிறது.

இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதாக நாடகமாடி ஆட்சியைப் பிடித்த மோடி அரசு, பாபர் மசூதி, காஷ்மீர் 370, சிஏஏ என இந்தத் தேர்தலில் முழுமையாக முஸ்லிம் எதிர்ப்பை நம்பியே தேர்தலை எதிர்கொள்கிறது.

முஸ்லிம்களுக்கு பாரட்சம் காட்டும் இந்த சிஏஏ சம்பந்தமான அறிவிக்கையை வெளியிட்ட பாஜக அரசை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு கண்டிக்கிறது. இச்சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்துகிறது. பாஜகவிற்கு எதிராக நாடு முழுவதும் அணிதிரண்டுள்ள அரசியல் கட்சிகள் சிஏஏ சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என தங்களுடைய தேர்தல் அறிக்கையில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என எஸ்ஐஓ கேட்டுக்கொள்கிறது.

அஹ்மது ரிஸ்வான்,

மாநிலத் தலைவர்,

எஸ்ஐஓ தமிழ்நாடு.

இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு இடஒதுக்கீடு: எஸ்ஐஓ வரவேற்பு

இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் இருந்த நிலையில், இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அவர்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

நீண்ட காலக் கோரிக்கைக்குத் தற்பொழுது தீர்வு ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. இறைநெறியைப் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் புதிதாக இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு இருந்த சிக்கல் தற்பொழுது தீர்க்கப்பட்டுள்ளது.

எஸ்ஐஓ இந்தக் கோரிக்கையைத் தொடர்ச்சியாக முன்வைத்து வந்தது. குறிப்பாக, 2022 ஏப்ரலில் முதல்வருக்குக் கோரிக்கை விடுத்தது. இந்தச் சமுதாயக் கோரிக்கையைப் பரிசீலித்து அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசுக்கு இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசின் செவிக்கு இந்தக் கோரிக்கையைக் கொண்டு சென்ற பல்வேறு தரப்பினருக்கும், குறிப்பாக மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் எந்த வகையிலும் வஞ்சிக்கப்படக் கூடாது, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு சரியான முறையில் சென்று சேர வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

அஹ்மது ரிஸ்வான்,

மாநிலத் தலைவர்,

எஸ்ஐஓ தமிழ்நாடு.

Back To Top